உறவெல்லாம் கூடி நின்று உரிய
பொருள் கொடுத்து , கொல்லன்
கும்பிட்டு செய்து கொடுத்த
ஒய்யாரப் பொன் தாலி.
காண்பவர் கண் நிறைய பக்திப்
பரவசத்தில் இரு உள்ளங்களையும்
இணைத்தே முடிந்த முதல் தாலி.
ஊரில் ஒருவர் அணியவில்லை என்
மருமகளைப் போல் என்று ,மார்தட்டும்
மாமியார்களின் பெருமிதத் தாலி.
எத்தனையோ நகைகள் எடுப்பாய் ஜோலி
ஜொலிக்க என் மதிப்பு வேறென்று எள்ளி
நகையாடும் சிங்காரப் பொன்தாலி.
காசில்லா தனலக்ஷ்மிகளுக்கும் ,
கணவனில்லா சுமங்கலிகளுக்கும் எட்டாக்
கனியாய் இனிக்கும் ஏற்றமிகு பொன்தாலி.
கட்டிய கணவனே கண்கண்ட தெய்வமென்று
கடமை புரியும் காவியத்
தலைவிகளின் கண்ணியத் தாலி.
தன் அகங்காரம் வாழ , கர்ப்பிணிகளை
கைவிடும் ஏகபத்னி விரதர்களின்
பொறுப்பில்லாப் பொன்தாலி.
தன் குழந்தைகளின் பசி போக்க ,
தன்மானத்துடன் வாழும் தைரிய லக்ஷிமிகளின்
தரமில்லா பொன் தாலி.
சிலம்பு உடைத்து , நியாயம் கேட்டவளின்
வாரிசுகள் இன்று தாலி புனைந்தும்
நிராயுதபாணிகளாய் !!
தாலிக்கு பொருள் இல்லை
பொன்னுக்கு பொருள் உண்டு.
தாலிக்கு பொருள் இல்லை.( இந்த உலகில் )
பொன்னுக்கு பொருள் உண்டு ( அடகு கடையில் ).
No comments:
Post a Comment