தோள் வரை வளர்ந்த பிள்ளையை
தோழியாக பார்க்கையிலே
வருடங்கள் ஓடியது புரிகிறது..
வாழ்க்கையை என்னவென்று நான் சொல்வேன்.
வாழ்ந்தே காட்டுகிறேன் பார்த்துக்கொள்.
விதியும், சதியும் என்ன செய்யும்?
விழிப்புடன் நாம் இருக்கையிலே.
நண்பனும் எதிரியும் நமக்குள்ளே
நம்மை நாமும் அறிந்து கொண்டால்.
நேசிப்பும் வாசிப்பும் சுவாசமானால்
பிரகாசிக்கும் நம் நாட்கள்.
அன்பு உள்ளம் கொண்டோரை
அரவணைத்து பக்கத்தில் வை.
ஆணவ குணம் கொண்டவரை
அன்பால் வெல்ல முயற்சித்துப்பார்.
பெண்ணை உடலாய் பார்ப்போரை
புன்முறுவலுடன் கடந்து போ..
பேச்சில் ஏளனம் செய்வோரை, உன்
பெருந்தன்மையால் வென்று விடு.
எதிரிகள் என்றும் நம் துரோணர்கள்
ஏகலைவனாய் நாம் இருந்தால்.
துரோகிகளை தூரம் வைத்து,
துணிவே துணையென கொள்ளம்மா.
No comments:
Post a Comment